16 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது

 

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/இணை ஆணையாளர் (கல்வி) திருமதி க. கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.02.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இப்பணிகளில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறையினர், தேர்தல் பணி தொடர்புடைய இதரத் துறையினர் உள்ளிட்ட 1000 அலுவலர்களுக்கு காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு மையத்திற்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்படின் அதற்கு மாற்று இயந்திரங்களை வழங்குதல், இந்த பணிகளின் போது பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தொடர்புடைய தேர்தல் பணி குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின் வசதி, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை களஆய்வு மேற்கொண்டு, தகவல் தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவிற்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் திருமதி நா. பூஷ்ணாதேவி (தேர்தல்கள்), திரு.ஜி.சரவணமூர்த்தி (நிலம் (ம) உடைமை), 16 சட்டமன்றத் தொகுதி மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: