×

சட்டமன்றப் பேரவையில் வினா – விடை நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார் அமைச்சர் சேகர்பாபு!

 

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (19.02.2026) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார். சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் : பேரவைத் தலைவர் அவர்களே, விராலிமலை தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மண்டையூர் அருள்மிகு பெரிய அய்யனார் திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட அரசு ஆவன செய்யுமா? அமைச்சர் : பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் கோரிய திருக்கோயிலில் ஏற்கனவே இருக்கின்ற தாய் கோபுரத்தை இராஜகோபுரமாக கட்டுவதற்கு செல்லையா என்ற ஒரு தனவந்தர் உபயதாரர் நிதியாக 34 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். அதற்குண்டான ஒப்புதல் கடிதம் கிடைத்திருக்கின்றது. இன்றைக்குள் ஆணையாளர் அவர்களின் உத்தரவை பெற்று நாளை மறுதினம் 22ஆம் தேதி நல்ல முகூர்த்த நாள் என்பதால் அன்றைக்கே இராஜகோபுர பணியை உறுப்பினர் அவர்களே நேரில் போய் துவக்கி வைக்கலாம் என்பதை பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் : பேரவை தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி வண்டியூர் ஸ்ரீ பெரிய அய்யனார் ஆலயம் என்பது ஒரு புகழ்பெற்ற பழமை வாய்ந்த 500 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயமாகும். பொதுவாக இன்று இந்த மண்டையூர்லே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும். ஒரு பக்கம் ஆன்மிக வாசல், அதன் இன்னொரு பக்கம் வாடிவாசல். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் வாடிவாசலும் ஆலய ஆன்மிக வாசலும் இரண்டரை கலந்து இருக்கும். அது பிரிக்க முடியாத ஒன்று. தேர் திருவிழாவோடு சேர்த்து ஜல்லிக்கட்டும் நடக்கும். அதனால் அமைச்சர் அவர்களின் பதிலை நான் வரவேற்று, உபயதாரர்களும் பல்வேறு பணிகளை செய்வார்கள். அதோடு சேர்த்து ஆணையர் நிதியிலிருந்து அரசு கட்ட முன்வர வேண்டும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக தெளிவாக கேட்டுக் கொள்கிறோம்.

அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, உபயதாரர் 34 லட்சத்துக்கு ஒப்புதல் கடிதம் தந்திருக்கிறார். அவர் முடியாத பட்சத்தில் நிச்சயமாக ஆணையர் பொதுநல நிதியிலிருந்து சட்டமன்றத்தில் அளித்த உறுதியின்படி உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் : பேரவை தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை தேவஸ்தானம் குறித்து அமைச்சர் அவர்களுக்கு ஏற்கனவே சட்டமன்றம் சொல்லிருக்கிறார்கள். 235 கோயிலை கொண்ட பெரிய தேவஸ்தானம். ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் குத்தகை கொடுத்த கோயில். அதில் பொதுவாக புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன், விராலிமலை முருகன் கோயிலில் இருந்து கொன்னையூர், நார்த்தமலை, விடுதலைப்பட்டி என பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில்கள் அடக்கம். திருமணஞ்சேரி, ஆலங்குடியில் இருந்து எல்லாமே அடக்கும். இதுல என்ன முக்கியமான விஷயம் என்றால் இன்றைக்கு வரைக்கும் செயல் அலுவலர் நிர்வகித்து வருகிறார். இவ்வளவு பெரிய வருமானம் வரக்கூடிய மாபெரும் புதுக்கோட்டை தேவஸ்தானம் இதற்கு நீங்கள் ஜே.சி. அளவிலான இணை ஆணையர், துணை ஆணையர் நிலை உயர்வு தருவதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலுக்கு ஒரு முழு நேர செயல் அலுவலர் நியமிக்க அரசாணை வழங்க வேண்டும் என்பதையும் அதற்கு அமைச்சர் முன்வருவாரா என்பதை அறிய விரும்புகின்றேன்.

அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களை பொறுத்தளவில் 235 கோயில்கள் அல்ல. 223 திருக்கோயில்களும், இரண்டு கட்டளை திருக்கோயிலிலும் என்று 225 திருக்கோயில்கள் அந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்டிருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு இந்த ஆட்சியை பொறுப்பேற்ற போது ஒரு கோடி ரூபாய் அரசு மானியமாக இருந்தது. அதில் ஒருவேளை தீபம் ஏற்றுவதற்கு கூட சிரமமான சூழலை அறிந்து தற்போது அந்த தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயிலுக்கு மட்டும் அரசு மானியமாக வழங்கி இருக்கின்ற தொகை 29 கோடி ரூபாய். அவர் விராலிமலைக்கு என்று தனியாக செயல் அலுவலரை போட வேண்டும் என்றார். 2021 ஆம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களுக்கு செயல் அலுவலர் ஒன்று என்றுதான் இருந்தது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022 ஆம் ஆண்டு செயல் அலுவலர்கள் (நிலை -3) நான்கு அலுவலரை நியமித்திருக்கின்றோம். அனைவரும் புதுக்கோட்டையிலுள்ள தேவஸ்தான தலைமையிட அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். நீங்கள் கோரிய இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றப்பட்டு, அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திருக்கோயில்களின் அலுவலகத்தில் பணிபுரிந்திட உத்தரவிடப்படும். புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலர் (நிலை – 1) பணியிடத்தை உதவி ஆணையர் பணியிடமாக நிலை உயர்வு செய்து இரண்டொரு நாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை பேரவைத் தலைவரின் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அது மட்டுமல்லாமல் தஞ்சாவூர் தேவஸ்தானத்தில் 88 திருக்கோயில்கள் இருக்கின்றன. அதில் ஒருவேளை விளக்கு எரிவதற்கு கூட பணம் இல்லாத சூழலில் முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகுதான் 2022 ஆம் ஆண்டு 3 கோடி ரூபாயை முதலில் வழங்கினோம். இன்றைக்கு அந்த தஞ்சாவூர் தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு 8 கோடி ரூபாயை ஆண்டுதோறும் வழங்குகின்றோம். இதுவரையில் தஞ்சாவூர் தேவஸ்தான திருக்கோயில்களுக்கு மட்டும் 20 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கியிருக்கின்றோம். அதேபோல் 490 திருக்கோயில்களை கொண்ட கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு 2021 ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் தான் அரசு மானியம் வழங்கப்பட்டது. இதனை கொண்டு அங்கே பணியாற்றுகின்ற பணியாளர்கள் கூட 2,000, 3,000 ரூபாய் என்று சம்பளம் இருந்த நிலையில் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் படிப்படியாக உயர்த்தி இந்த ஆண்டு 18 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கியிருக்கின்றார். இதுவரையில் 51 கோடி ரூபாயை கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்களுக்கு அரசு மானியமாக வழங்கி இருக்கின்றோம். எரியாத இருள் சூழ்ந்த திருக்கோயில்களிலும் ஒளி தீபம் ஏற்றியது திராவிட மாடல் ஆட்சி என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன்: பேரவை தலைவர் அவர்களே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியிலுள்ள முருகன் கோயில் மிகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வந்து செல்லுகின்றார்கள். அந்த கோயில் குளம் மிகவும் பழுதடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருக்கின்றது. அதனை சீர்செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று தங்கள் வாயிலாக கேட்ட அமர்கிறேன். அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, எண்ணிலடங்கா திருக்கோயில்களின் திருக்குளங்களில் தெப்பமே காணாத கோயில்களில் கூட தெப்பத் திருவிழா நடத்திய ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாகும். அந்த வகையில் சிறுவாபுரி திருக்கோயில் கூட தெப்பத்தை சீர் செய்து தெப்ப விழா நடத்தியிருக்கின்றோம். உறுப்பினர் கோரிய அந்த திருக்கோயிலில் திருக்குளத்தை சீரமைக்க போதிய நிதி வசதி இல்லை. அவர் பெரிய செல்வந்தர். உபயதாரராக அவர் நிதியை தந்தால் உடனடியாக ஒரு வார காலத்திற்குள் அந்த தெப்பக்குளத்தை சீர் செய்திடும் பணியை துவக்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது என்பதை பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Tags : Assembly Council ,Minister ,Sekarbaba ,Chennai ,Tamil Nadu Assembly Council ,Hinduism ,Social Affairs ,P. K. Sekarpapu ,Viralimalai ,Assemblyman ,Dr. C. Vijayabaskar ,Kummidipundi ,
× RELATED தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட...