விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் இன்டர்னல் சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குக் காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம். காரணம் எளிது.
இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது? நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்தால் பெரிய அலை வரும் என்கிறார்கள். 2026ல் 20 சதவீத வாக்கு கூட கடக்க முடியுமா என்பது தான் பெரிய கேள்வி.
அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது ‘அதிர்ச்சி செய்தி’ அல்ல, மெதுவாக ‘அரசியல் உண்மை’ ஆகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது. அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், எந்த அவசரத் திட்டங்களாலும் அதை மாற்ற முடியாது. இவ்வாறு கூறியுள்ளார். காங்கிரஸ் கூட்டணி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வந்த மாணிக்கம் தாகூர், அக்கட்சி தலைமை வாய் பூட்டு போட்டதால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து மீண்டும் விமர்சிக்க தொடங்கி உள்ளார்.
