சில என்ஜிஓக்கள் சொன்னதை கேட்கிறார் நாடாளுமன்றம் செயல்படுவதில் ராகுல் காந்திக்கு ஆர்வமில்லை: கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

தவாங்: தனது சொந்த மக்களவை தொகுதியான அருணாச்சல் மேற்கு தொகுதிக்கு சென்றுள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அங்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தை நடத்துவதில் ராகுல் காந்திக்கு ஆர்வம் இல்லை. அவர் பிரச்னைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். உங்கள் கட்சிக்கு நல்ல காலம் பிறக்கும் என சில என்ஜிஓக்கள் ராகுல் காந்திக்கு பாடம் எடுக்கின்றன. அப்படி எந்த நல்ல காலமும் காங்கிரசுக்கு வராது. அடுத்த தேர்தலில் அவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். எதிர்க்கட்சிகள் அவையை முடக்குவதால் எங்களின் ஆளும் கூட்டணிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஏற்கனவே காங்கிரசை சமாதானப்படுத்த அனைத்தையும் செய்து விட்டோம். இனியும் கூடுதலாக எதுவும் செய்யப் போவதில்லை. அவர்கள் தேர்தலில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்துள்ளனர். அந்த நிலைமையை மாற்ற வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத்தில் பொய் புகார்களை கூறுகின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரசுடன் இல்லை. பல சிறிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கான நேரத்தை பயன்படுத்த முடியாமல் அதிருப்தி அடைந்துள்ளன. ராகுல் காந்தி மீது அதிருப்தியில் உள்ளன. அதனால் தான் சில கட்சிகள் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை. இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறி உள்ளார்.

Related Stories: