ஆதித்ய ராய் கபூருடனான உறவு முறிந்த நிலையில் அமெரிக்க ஆணழகனுடன் நடிகை அனன்யாவுக்கு காதல்

மும்பை: நடிகை அனன்யா பாண்டேவுக்கும் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ஆணழகன் வால்கர் பிளான்கோவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, கடந்த காலங்களில் நடிகர் ஆதித்ய ராய் கபூருடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வந்தார். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதன் பின்னர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது அனன்யாவுக்கு, அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ஆணழகன் வால்கர் பிளான்கோவுடன் பழக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்து மியாமியில் வளர்ந்த இவர், தற்போது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அம்பானி குழுமத்தின் வந்தாரா வனவிலங்கு திட்டத்தில் பணியாற்றி வருகிறார். அந்த திருமண விழாவின் போதே வால்கரை தனது ‘துணை’ என அனன்யா மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக தகவல்கள் வெளியாகின. இவர்களது காதல் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகாத நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அனன்யா தனது கழுத்தில் வால்கர் பெயரின் முதல் எழுத்தான ‘டபிள்யூ’ என பொறிக்கப்பட்ட பதக்கத்தை அணிந்து ரசிகர்களுக்கு சூசகமாக தெரிவித்தார்.

அனன்யாவின் 26 பிறந்தநாளின் போது வால்கர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் அழகியே! நீ மிகவும் சிறப்பானவள்! உன்னை காதலிக்கிறேன்!’ என பதிவிட்டு காதலை முதன்முதலில் வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் பிப். 14ம் தேதி வால்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அனன்யா பாண்டே அவருக்கு சமூக வலைதளத்தில் உருக்கமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல நாட்களாக நீடித்து வந்த இவர்களது காதல் கிசுகிசு தற்போது உறுதி செய்யப்பட்டு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Related Stories: