பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 10வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, நயினார் நாகேந்திரனிடம் தங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தான், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், ஒன்றிய அரசிடம் கேட்டால் மாநில அரசிடம் கேட்குமாறு அலைகழிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு உங்களுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது ஒன்றிய பாஜ அரசு இல்லை எனவும், எனவே மாநில அரசிடம் தான் நீங்கள் முறையிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதற்கு சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால், டென்ஷனான நயினார் நாகேந்திரன் பாதியிலேயே அங்கிருந்து கிளம்பினார். அப்போது இது குறித்து நிருபர்கள் கேள்விகள் எழுப்பிய நிலையில், பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார்.
இதேபோல், இந்த போராட்டத்துக்கு தெரிவித்து சென்ற தவெக நிர்வாகிகளையும் அங்கன்வாடி ஊழியர்கள் விரட்டி அடித்தனர். தேர்தலை குறி வைத்து தவெக, அதிமுக, பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டக்களத்தில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை சந்திப்பதும், அவர்களது வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டம் பிடிப்பதும் தொடர் கதையாக உள்ளது.
