சென்னை: ஐடி நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேசனின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. இவருக்கும் பிரமிளா என்பவருக்கும் கடந்த 1993ல் திருமணம் நடந்தது. இருவரும் சுமார் 30 ஆண்டுகள் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2019ல் ஸ்ரீதர் வேம்பு இந்தியா திரும்பினார். இதையடுத்து 2021ல் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி ஸ்ரீதர் வேம்புவின் மனைவியும் ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவருமான பிரமிளா சீனிவாசன் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீதர் வேம்பு தன்னையும், தனது மகனையும் கைவிட்டு விட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்துவரும் விவாகரத்து வழக்கிற்காக இந்தியாவில் வசிக்கும் ஸ்ரீதர் வேம்பு, சாட்சிகளான அவரது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் பிரதிநிதிகள் ஆகியோரின் சாட்சியங்கள், வாக்குமூலங்களை பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
