வத்தலக்குண்டு : வத்தலக்குண்டுவில் கிடா முட்டும் போட்டி களைகட்டியது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு சவுத் லயன்ஸ் கிடா முட்டு நண்பர்கள் சங்கம் சார்பாக 2ம் ஆண்டு கிடா முட்டும் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல், திருச்சி, பழநி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, உசிலம்பட்டி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 150 கிடாக்கள் கலந்துகொண்டன.
பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் போட்டியை துவக்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.பி.முருகன், கனிக்குமார், கனகதுரை, நகரச் செயலாளர் சின்னத்துரை, வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் கிடாக்கள் 75 முட்டுகள் முட்ட வேண்டும். இதில் சுமார் 30 முதல் 40 முட்டுகளுக்குள் சில கிடாக்கள் சோர்வடைந்து தோல்வியடைந்தன. ஒரு சில கிடாக்கள் 50 முதல் 55 முட்டுகள் முட்டி வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற கிடாக்களின் உரிமையாளர்களுக்கு வத்தலக்குண்டுவின் பிரசித்திபெற்ற வெற்றிலை நாற்றுகள் வழங்கப்பட்டன. மேலும், பீரோ, கட்டில், மெத்தை, சில்வர் அண்டா, காஸ் அடுப்பு, மிக்ஸி போன்ற பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.
