விழுப்புரம்: உடலில் ஊசி மூலம் பாதரசம் செலுத்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் துளசிராம்(39). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மதுரை கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாளுடன் திருமணம் நடந்தது. 5 வயதில் மகன் உள்ளார். துளசிராம் பிஇ வரை படித்துவிட்டு சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தாராம்.
ஆனால் அங்கிருந்து வேலையில் இருந்து நீக்கியதால் மன உளைச்சலில் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனிடையே மனைவி பாண்டியம்மாளும் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். வேலை இல்லாததாலும், மனைவி பிரிந்து சென்றதாலும் விரக்தியில் இருந்த துளசிராம், பாதரசம் வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
