×

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: குருவிகளாக செயல்பட்ட கேரள பட்டதாரிகள் சிக்கினர்

சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம், உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சென்னைக்கு கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலத்தை சேர்ந்த 4 இளைஞர்கள், ஒரு குழுவாக தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக சென்று, அடுத்த நாளே, விமானத்தில் சென்னைக்கு திரும்பியதை அறிந்து விசாரித்தனர். அப்போது 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, பதப்படுத்தப்பட்ட உணவுப் பாக்கெட்டுகள் மற்றும் சாக்லேட் பாக்கெட்களில் மறைத்து வைத்திருந்த 15 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல், நேற்று அதிகாலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த மற்றொரு பயணிகள் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து சென்று வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்களின் இடையே 8 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சிக்கியது.

இதன் சர்வதேச மதிப்பு ரூ.8 கோடி. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள், ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் 6 பேரும், சர்வதேச போதை கடத்தும் கும்பலுக்கு, குருவிகளாக செயல்பட்டுள்ளனர். படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததாலும், சாதாரண வேலை பார்த்தால், குறைந்த அளவு வருமானமே கிடைக்கும்.

அதை வைத்துக்கொண்டு, ஆடம்பரமாக, வசதியாக வாழ்க்கை நடத்த முடியாது என்பதால், குறுக்கு வழியில், அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இதைப்போல் கடத்தல் குருவிகளாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில், அடுத்தடுத்து 2 விமானங்களில், ரூ.23 கோடி மதிப்புடைய 23 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Thailand ,Chennai ,Kerala ,Chennai Airport Customs Department ,Air Intelligence ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்தில்...