சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில், சென்னை நடைபெற்ற 49வது புத்தக காட்சியில் புத்தகம் வெளியிடப்படும் என்று இணையதளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க கோரி வேலூரை சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி குறித்து தவறாக சித்தரிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தக கண்காட்சி இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜரானார்.
அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதில், புத்தக காட்சியில் சோதனையிட்டபோது, சம்பந்தப்பட்ட புத்தகம் எதுவும் அங்கே விற்பனை செய்யப்படவில்லை என்று தெரிய வந்தது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் கீழைக்காற்று பதிப்பக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் அளித்த எழுத்துப்பூர்வமான விளக்கத்தில், சர்ச்சைக்குரிய அந்த புத்தகம் கண்காட்சியில் வெளியிடப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லை என்று உறுதியளித்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
