சென்னையிலிருந்து நேற்று மதுரை வந்த தவெக ஊடகப் பிரிவு துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தவெக ஓட்டை என்ஜின் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். அண்ணாமலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைப் பேசுவார். ஒன்றரை வருடத்துக்கு முன் தவழ்ந்து, காலில் விழுந்து இரட்டைக் கொலை செய்து ஆட்சியைப் பிடித்த தற்குறி பழனிசாமி என்று மேடையில் கூறிய அவர், தற்போது அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்கிறார். இதுபோன்ற கேவலமான நபர்கள் பற்றி பேச வேண்டாம் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘41 உயிர்கள் பலியான குற்ற உணர்ச்சி இல்லாமல் மேடையில் விஜய் ஆடுறாரு, அவர் வாங்குனதுல கருப்பு பணம் அதிகம்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அதிமுகவில் இருந்து பேசுபவர்கள் பற்றி நாங்கள் பேச வேண்டாம் என்றுதான் தெளிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளோம். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களான அதிமுகவினர் குறித்து, மக்களிடம் நாங்கள் பேசுவதில்லை. பேச விரும்பவில்லை. அவர்களுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும் அதற்கான வேலைகள் நடக்கின்றன’’ என்றார்.
* ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை
‘‘அதிமுக ஊழல் கட்சின்னு சொல்லும் விஜய், ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார். ஆனால் எங்களை மட்டும் குற்றம் சொல்கிறார்’ என்று அதிமுகவினர் கூறுவது குறித்து கேட்டபோது, ‘‘அம்மா மீதான பல வழக்குகள் தவறாகக் கையாளப்பட்டு இருக்கலாம். அவர்களின் வீட்டில் இருந்தவர்கள் பெயர்களைப் பயன்படுத்தித் தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் அவரது மனசாட்சி அடிப்படையில் கண்டிப்பாக ஜெயலலிதா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான் மக்களுடைய கருத்து, அதுவே எங்களுடைய கருத்து’’ என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.
* கூட்டணியை அறிவிச்சுது பியூஸ் கோயல்: அதிமுக அல்ல
‘‘அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று கூறியதை, விஜய் அறியாமல் இருக்கிறார். வெளியில் வந்தால்தானே நாட்டு நடப்பு தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். ஒரு கூட்டணியில் 10 தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யார் முன்பாக கூட்டணி அமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். பியூஷ் கோயல் முன்பாக ஒரு ஹோட்டலில் உருவான கூட்டணி குறித்த அறிவிப்பை பாஜ தான் வெளியிட்டது. இதன்படி பார்த்தால், கூட்டணியை அவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள். அதிமுகவின் பார்ட் இதில் எதுவுமே இல்லை. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் என்ன வேண்டுமானாலும் அள்ளி விடலாம்’’ என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.
