நாமக்கல், பிப்.5: நாமக்கல்லில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், நேற்று 2வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி, சத்துணவு பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.19,500 சம்பளம் வழங்க வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளருக்கு, அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.15,700 சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். செயலாளர் அனுராதா, பொருளாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், மறியலில் ஈடுபட்ட 275 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
