பொள்ளாச்சிக்கு பாஜ ஆப்பு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில், கடந்த 2021ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும், அந்த தொகுதியை தொடர்ந்து தக்கவைத்திருந்தாலும் அதன் கூட்டணி கட்சியான பாஜவினரே, வரும் சட்டமன்ற தேர்தலில் புறம்தள்ள தயாராகி வருகின்றனர். பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவுக்கு போட்டியாக, பாஜவினர் தங்கள் பலத்தை நிரூபிக்க இப்போதே களம் இறங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிலும், சிட்டிங் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த நான்கு ஆண்டுகளைவிட, கடந்த சில மாதமாக கட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளை தாமாக முன்வந்து நடத்தி வருகிறார். இத்தருணத்தில், அதிமுகவுக்கு போட்டியாகவும், எதிராகவும் பாஜ நிர்வாகிகள் சிலர் இறங்கியிருப்பது, அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: அன்மையில் பாஜவில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ள, கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர்கள், தனியாக கூட்டத்தை சேர்த்து, அதிமுகவைவிட அதிகளவு கூட்டம் உள்ளது என நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள். இப்படி ஒரு மாயை உருவாக்கி, தொகுதியை பெற்றுவிடலாம் என நினைக்கின்றனர். பொள்ளாச்சியில் கடந்த வாரம் நடந்த அதிமுக வீரவணக்க நாள் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக சுட்டிக்காட்டி, அதிமுகவைவிட எங்களுக்கு மவுசு பொள்ளாச்சியில் அதிகரித்துள்ளது என அவதூறு பரப்புகின்றனர். இத்தொகுதியில் பாஜவினர் காவடி எடுத்தாலும், அவர்களது எண்ணம் பலிக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: