U19 உலகக் கோப்பை தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

2026 U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில், பரம எதிரியான பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சால் நிலைகுலைந்தது. 50 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியாத இந்திய அணி, 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க அந்த இலக்கை 33.3 ஓவர்களுக்குள் எட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் உஸ்மான் கான், கேப்டன் ஃபர்ஹான் யூசுப் மற்றும் ஹம்சா ஜஹூர் ஆகியோர் தொடக்கத்தில் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு கடும் சவாலை அளித்தனர். ஒரு கட்டத்தில் 30 ஓவர்களில் 151 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், மிக எளிதாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும் என்றே தோன்றியது.

ஆனால், இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே பந்துவீச வந்த பிறகு ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த உஸ்மான் கானை 66 ரன்களில் வீழ்த்திய மத்ரே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரித்து பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார். இதனால் நிலைகுலைந்த பாகிஸ்தான் அணியின் கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 43 ரன்களுக்குள் சரிந்தன. இறுதியில் பாகிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த அபார வெற்றியின் மூலம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இணைந்து இந்தியாவும் நான்காவது அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Related Stories: