சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் நமது அரசு மற்றும் தமிழக முதல்வர் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
