அரியலூர்,ஜன.30:அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தீண்டாமை ஓழிப்பு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் ரத்னா வாசிக்க, அதனை தொடர்ந்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின் தொடர்ந்து கூறி தீண்டாமை எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். எஸ்பி அலுவலகம்அரியலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை வாசிக்க அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின் தொடர்ந்து கூறி தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி மண்டல துணை தாசில்தார்கள், நில அளவையர் பிரிவு பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.