சென்னை: கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது உயிரிழந்த கல்லூரி மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் கிராமம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் முதலாமாண்டு பயின்று வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டையைச் சேர்ந்த, திவ்யதர்ஷினி (வயது 17) என்பவர் கடந்த 23ம் தேதி பிற்பகல் சக மாணவியருடன் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவி திவ்யதர்ஷினியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
