ஓசூர், ஜன.28: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசி தடியடி நடத்தப்பட்டது. அதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் ஏஐடியுசி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆதில் தலைமை வகித்தார். சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மாதையன், நகர செயலாளர் ராமச்சந்திரன் உட்பட இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.