மும்பை: நடிகர் தனுஷ் – நடிகை மிருணாள் தாக்கூர் திருமணம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தனுஷுக்கு நெருக்கமான இயக்குனர் அளித்துள்ள தகவல் உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. 42 வயதான தனுஷ், 33 வயதான மிருணாள் தாக்கூரை வரும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வைரலாக பரவி வருகிறது. தனுஷ் – மிருணாள் திருமண யூகத்துக்கு காரணமாக அமைந்த விஷயம், மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ‘சன் ஆஃப் சர்தார்’ இந்தி படத்தின் சிறப்பு திரையிடலின்போது தனுஷ் மும்பை சென்று அதில் கலந்துகொண்டார்.
அப்போது தனுஷ் – மிருணாள் தாக்கூர் இருவரும் கைகோர்த்து நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நிகழ்வில், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பேசிக்கொண்ட காட்சிகளும் கவனம் பெற்றன. அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவ தொடங்கின. அடுத்து தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ இந்தி படத்தின் வெற்றி விழாவில் மிருணாள் தாகூர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், படத்தில் அவர் நடிக்கவில்லை. இருப்பினும் விழாவில் தனுஷூக்காக கலந்துகொண்டதாக பேசப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?” என்றார். இதன் மூலம் இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.
