ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்: ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு

சென்னை: ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம் என ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசமைப்பு சீர்திருத்தங்களால் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்னை குறித்து இந்தியப் பிரதமரின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் (Thimpu Principles) குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில்,

* இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்);

* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்);

* தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல்(தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும்

* மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்; போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தது.

இந்த நிலையில், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வரவேற்கிறோம் என ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தூதரக உறவுகளை பயன்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முதலமைச்சர் ஜன.11ல் கடிதம் எழுதியிருந்தார். ஈழத் தமிழரின் அரசியல் தீர்வுக்காக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் முன்னெடுத்து வரும் அயலக தமிழர் மாநாடு பாராட்டுக்குரியது என தெரிவித்திருந்தனர்.

 

Related Stories: