பாலக்காடு, ஜன.28: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டை அடுத்த அணநல்லூரை சேர்ந்த அனஸ்பாபு (43), மன்னார்க்காட்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (32), அணநல்லூரைச் சேர்ந்த ராகுல் (21) ஆகிய மூன்று பேர் பாலக்காட்டிலிருந்து கோட்டயத்திற்கு காரில் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களை குறித்து கோட்டயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில். கோட்டயம் போதைத்தடுப்புப்பிரிவு போலீசார் டி.எஸ்.பி., வினோத்பிள்ளை தலைமையில் கோட்டயம் மாவட்டம் திருவாதுக்கால்-நாட்டகம் சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது பாலக்காட்டிலிருந்து கோட்டயம் நோக்கி வந்த நபர்களின் காரை போலீசார் தடுத்து சோதனையிட்டதில் காரின் பின்சீட்டிற்கு அடியில் 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுப்பிடித்து பறிமுதல் செய்து மூன்று கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.