எருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்

அணைக்கட்டு, ஜன.28: அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில் நேற்று எருது விடும் விழா கோலாகலமாக நடந்தது. விழாவை டெல்லி குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. முன்னதாக, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வேணுசேகரன் தலைமையில், தாசில்தார்கள் சரவணமுத்து, முருகன், கால்நடைத்துறை உதவி இயக்குனர் அந்துவன் மற்றும் விழாக்குழுவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, காலை 10 மணியளவில் எருதுவிடும் விழா தொடங்கியது. இதில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, வேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 170 மாடுகள் சீறிப் பாய்ந்து ஓடியது. ஏராளமான மக்கள் விழாவை ஆர்வரத்துடன் கண்டுகளித்தனர். விழாவில், குறிப்பிட்ட தூரத்தை அதிவேகமாக கடந்து ஓடிய காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ₹50,001 என மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், விலங்குகள் நலவாரிய அமைப்பை சேர்ந்த சுமதி, ஷோபா உள்ளிட்டோர் அடங்கிய டெல்லி குழுவினர் நேற்று விழா நடக்கும் இடத்தில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, எருதுகள் ஓடும் பாதையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்த அவர்கள், விழா முடியும் வரை கண்காணித்தனர். மேலும், விழாவில் காயமடைந்த 15 வீரர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, இறைவன்காடு கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் உள்ளூர் இளைஞர்கள் சிலர் வாடிவாசலில் இருந்து எருதுகளை வீதியில் இழுத்துவிட்டு வழிகாட்டி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளைஞர்களை அங்கிருந்து வெளியேற்றினர். உள்ளூர் இளைஞர்களுக்கு கூட தட்டிக்குள் நிற்க அனுமதியில்லையா என அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: