திருவெறும்பூர், ஜன.27: திருவெறும்பூர் அருகே வேங்கூரில் அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி தமிழ் புலிகள் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் ரமணா தலைமையில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து தங்களது கோரிக்கையை புகார் மனுவாக இன்ஸ்பெக்டர் ஞானவேலனிடம் வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட ஞானவேலன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். திருச்சி, ஜன.27: திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் அவர்களை நல்வழிபடுத்தவும், காவல்துறையோடு பொதுமக்களையும் ஒன்று சேர்க்கும் உயரிய நோக்கத்தில் “பகுதி ரோந்து விழிப்புணர்வு காவல் அலுவலர்கள்” எனும் திட்டத்தின் கீழ் மாநகரின் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 50 பீட் ரோந்து அலுவலில் உள்ள காவலர்களை கொண்டு செயல்படுத்தப்படுகிறது.