விழிப்புணர்வு திட்டம் துவக்கம் குடியரசு தின விழா கோலாகலம்

திருச்சி, ஜன.27: திருச்சியில் பல்வேறு பகுதிகளில் குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 25 ஆண்டுகள் மாசற்ற பணியாற்றியதற்காக வருவாய்த்துறையில் 13, ஊரக வளர்ச்சித்துறையில் 19, பேரூராட்சித்துறையில் 1, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் உள்பட 409 பேருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். அதேபோல மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையில் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேல் உள்ளிட்ட 110 பேருக்கு தமிழக முதல்வரின் குடியரசு தின காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மொத்தம் 534 பேருக்கு சான்று, பரிசுத்தொகை, பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் போலீஸ் கமிஷனர் லோகநாதன், டிஐஜி ஆனிவிஜயா, துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள போர் நினைவு சின்னத்தில் கலெக்டர் சிவராசு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கோட்ட மேலாளர் அஜய்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். திருச்சி ஏர்போர்ட்டில் இயக்குனர் தர்மராஜ் தேசிய கொடியேற்றினார். இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரிஸ்சிங்நயள் உள்பட பலர் பங்கேற்றனர். பொன்மலை ரயில்வே பணிமனையில், பணிமனை முதன்மை மேலாளர் ஷியமதர்ராம் கொடியேற்றினார். தெற்கு ரயில்வே பெண்கள் நல அமைப்பின் பொன்மலை பிரிவு தலைவர் சந்திராவதிதேவி 200 பீமா வகை மூங்கில் மரக்கன்றுகளை பணிமனை வளாகத்தில் நட்டார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அருணாசலம் மன்றத்தில் அக்கட்சி மாவட்ட தலைவர் ஜவஹர் தேசியக் கொடியேற்றினார். கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி தேசியக் கொடியேற்றினார். கல்லூரி இயக்குனர் சாமிநாதன், முதல்வர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தியாகராஜன் கொடியேற்றினார். தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் ஊரக வாழ்வாதார இயக்ககத்தில் டிரைவராக பணிபுரியும் திருநங்கை சினேகா தேசியக் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திருச்சி திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகேயுள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி அருகே மாநில தலைவர் ஆறுமுகம் தேசிய கொடியேற்றினார். திருச்சி என்ஐடியில் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தேசியக்கொடியேற்றினார்.

மாநகராட்சியில்  18 பேர் கவுரவிப்பு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் ஆணையர் சிவசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த  18 பேருக்கு ரூ.2000 ரொக்கம், சான்றிதழ்கள் வழங்கினார். கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய  38 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர், அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காந்தி மார்க்கெட் போர் வீரர்கள் நினைவு  தூணிற்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சிகளில்  மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: