திருவாரூர், ஜன. 27: திருவாரூரில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார். திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 72வது குடியரசு தின விழா அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனையொட்டி காலை 8 மணியளவில் தேசியக் கொடியினை கலெக்டர் சாந்தா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கலெக்டர், அதன்பின்னர் 60 போலீசார் உட்பட 168 அரசு அலுவலர்களுக்கு நற் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அரசின் வேளாண் துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 35 பேருக்கு ரூ 27 லட்சத்து 89 ஆயிரத்து 614 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் எஸ்பி துரை, டிஆர்ஓ பொன்னம்மாள், ஆர்.டி.ஓ க்கள் பாலச்சந்திரன், புண்ணியகோட்டி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசுமருத்துவமனையில் தலைமைமருத்துவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தலைமைமருத்துவர் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.பின்னர் அனைத்து ஊழியர்களும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் மருத்துவர்கள் மருந்தாளுநர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருத்துறை–்ப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெகதீசன், நகராட்சியில் ஆணையர் (பொ) சந்திரசேகரன், டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி பழனிச்சாமி, காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றிவைத்தனர்.