×

போலீசை தாக்கிவிட்டு தப்பிய குற்றவாளி சிக்கினான்

சின்னசேலம், ஜன. 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தில் கடந்த நவம்பர் 2019ல் பைக் ஒன்று திருடு போனது. இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கிய சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே காட்டுபாளையத்தை சேர்ந்த முருகன் மகன் சக்கரவர்த்தி(25) என்பவர், நாமக்கல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சின்னசேலம் பகுதியில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் முஸ்தபா, சிவராமன் ஆகியோர் கடந்த 23ம் தேதி  நாமக்கல் சிறைச்சாலையில் இருந்து சக்கரவர்த்தி உள்பட 2 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் விசாரிக்க பேருந்தில் சின்னசேலம் அழைத்து வந்தனர். நாமக்கல்லில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையம் வந்து கள்ளக்குறிச்சி பஸ் ஏறுவதற்காக இறங்கி உள்ளனர்.

அப்போது சக்கரவர்த்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி உள்ளார். இதையடுத்து சிவராமன், முஸ்தபா ஆகியோர் அவரை பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றொரு குற்றவாளியை பார்த்துக்கொண்டு பஸ் நிலையத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.அப்போது, சக்கரவர்த்தி சிறுநீர் கழிப்பதுபோல பாவ்லா காட்டி தப்பிஓட வழியை பார்த்துள்ளார். இருந்தும் போலீசார் அவனை பஸ் நிலையம் அழைத்து வந்துள்ளனர். பஸ் அருகில் வந்தபோது திடீரென போலீசை தள்ளிவிட்டு சிறுநீர் கழிக்க சென்ற வழியே தரைப்பாலத்தின் அடியில் புகுந்து தப்பி ஓடிவிட்டான். போலீசார் சிவராமன், முஸ்தபா ஆகிய இருவரும் பின் தொடர்ந்து ஓடினர். அப்போது முஸ்தபா கால் இடறி தரைப்பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த முஸ்தபா ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.இந்த சம்பவத்தையடுத்து மற்றொரு குற்றவாளி சுப்பிரமணியனை எஸ்ஐ சின்னசேலம் காவல் நிலையம் அழைத்து சென்றார். மேலும் தப்பி ஓடிய குற்றவாளியை பிடிக்க சின்னசேலம், சேலம் மாவட்ட போலீசார் கூட்டாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.இந்நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அந்த வீட்டிற்கு சென்று சக்கரவர்த்தியை பிடித்து கைது செய்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை