×

புதுகையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டையில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு 162 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் உமா மகேஸ்வரி ஏற்று கொண்டார். அப்போது எஸ்பி பாலாஜி சரவணன் உடனிருந்தார். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 63 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த 162 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதையடுத்து புதுக்கோட்டை மேல 3ம் வீதியில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகி சிவப்பிரகாசம் இல்லத்துக்கு சென்று அவரது மனைவி மணிமேகலைக்கு கதர் ஆடை அணிவித்து பரிசு வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நமணசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் ‘சாட் பேப்பரால்” உருவாக்கப்பட்ட இந்திய ராணுவ தளவாட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : celebration ,Republic Day ,New York ,
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்