×

புதுகை மாவட்டத்தில் முதற்கட்டமாக 10,199 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டம்

புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 10,199 முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணியை கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,270 முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி பார்வையிட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 358 முன்கள பணியாளர்கள், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 224 முன்கள பணியாளர்கள், திருவரங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 240 முன்கள பணியாளர்கள் என மாவட்டத்தில் 4 இடங்களில் 2,092 முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் இரண்டு தனித்தனி இடங்களில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 10,199 முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு அவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தேவையான 6,900 கோவிசீல்டு கோவிட்-19 தடுப்பூசி மருந்து, 1,100 கோவேக்சின் தடுப்பூசி மருந்து என மொத்தம் 8,000 தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன் தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக ஏற்கனவே மாதிரி ஒத்திகைகள் பார்க்கப்பட்டுள்ளது. வருகிற திங்கட்கிழமை முதல் 75 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 13 அரசு மருத்துவமனைகளிலும் முன்கள பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே முன்கள பணியாளர்கள் அச்சமின்றி கோவிட்-19 தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என்றார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொது சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, அரசு மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உடனிருந்தனர்.

Tags : phase ,district ,frontline workers ,
× RELATED நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை