திருச்சி, ஜன.26: 72வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகளை அனுமதித்து வருகின்றனர். மேலும் இன்று திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவு வாயில், கார் பார்க்கிங், பயணிகள் மற்றும் உறவினர்கள் வரும் கார்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயணிகளின் உடமைகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.