×

தி.பூண்டி உழவர் சந்தைக்கு அதிகாலை 4 மணி பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜன.26: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் தலைவர் நாகராஜன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: திருத்துறைப்பூண்டியில் இயங்கி வரும் உழவர் சந்தைக்கு வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம், செட்டிப்புலம், அவரிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து நாட்டு காய்கறிகளை விவசாயிகள் உழவர் சந்தைக்கு இயக்கப்படும் இலவச பஸ்கள் மூலம் குறைந்த விலைக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறியை விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். தற்போது வேதாரண்யம் பஸ் நிலையத்திலிருந்து திருத்துறைப்பூண்டி உழவர்சந்தைக்கு அதிகாலை 4 மணிக்கு இயக்கப்பட்ட உழவர் சந்தை பஸ்கள் இயக்கப்படுவதில்லை. உரிய நேரத்தில் காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வர முடிவதில்லை. தேங்காய், இளநீர் மற்றும் நாட்டுக் காய்கறிகளை திருத்துறைப்பூண்டி கொண்டுவந்து பட்டுக்கோட்டை உழவர் சந்தைக்கும் விவசாயிகள் இவ்வழியில்தான் செல்ல வேண்டியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு இயக்கும் பஸ்சில் சென்றால்தான் 80 கி.மீ. தூரம் செல்ல முடியும். கிராமங்களில் விவசாயிகளின் அடிப்படை வருமானம் காய்கனி விற்பனையில் தான் உள்ளது. இது குறித்து தலையிட்டு வேதாரண்யத்தில் இருந்து அதிகாலையில் திருத்துறைப்பூண்டி உழவர் சந்தைக்கு செல்லும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Boondi Farmers Market ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு