×

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஜன.26: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் சட்டக்கல்லூரி தமிழக அரசால் செயல்பட்டு வருகிறது. இந்த சட்டக்கல்லூரிகளில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அவர்களின் அருகாமையில் இருக்கும் சட்ட கல்லூரிகளை தேர்வு செய்து படித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் சட்ட கல்லூரி இல்லை. புதுக்கோட்டையில் சட்டக்கல்லூரி இருந்தால் புதுக்கோட்டை மட்டும் பயனடையபோவதில்லை. தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக புதுக்கோட்டை உள்ளது. இதனால் புதுக்கோட்டையில் சட்ட கல்லூரி அமைந்தால் அனைவருக்கும் ஏதுவாக இருக்கும். திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்துகொள்கின்றனர்.

மதுரை சட்டக்கல்லூரியில் திண்டுக்கல், தேனி மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்துகொள்கின்றனர். கோயம்புத்தூர் சட்டக்கல்லூரியை திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்துகொள்கிறார்கள். திருச்சியை கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்துகொள்கின்றனர். புதுக்கோட்டை, சிவகங்ககை , தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரியில் கிடைக்கும் இடங்களை தேர்வு செய்து படிக்கின்றனர். இவர்களுக்கு பல வழிகளில் கூடுதல் செலவு ஏற்படுகிறது. புதுக்கோட்டையில் சட்டக்கல்லூரி அமைந்தால் தென்மாவட்டங்களில் சில மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சில மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் புதுக்கோட்டைக்கு வந்து செல்ல ஏதுவாக இருக்கும். இதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் சட்டக்கல்லூரி அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Law college ,Pudukkottai district ,
× RELATED கல்லூரியில் இருந்து டிசியை...