சிவகாசி, ஜன. 26: சிவகாசி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஆணையாளர் ராமராஜ் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்னைகளை எடுத்துரைத்தனர். ஆழ்வார்ராமானுஜம்: சிவகாசி ஒன்றியத்துக்குட்பட்ட பல கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்தியசேனை புதுக்காலனி பகுதியில் போதிய வாறுகால்வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மீனாட்சிசுந்தரி: வெள்ளூர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
சுடர்விழி சசிகுமார்: எனது வார்டுக்கு வரும் உள்ளே வரும் நகராட்சி சாலைகள் மோசமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று சாலையை சீரமைக்க வேண்டும். சங்கையா: யூனியன் ரோடு சரி இல்லை என்றால் யூனியன் கூட்டத்தில் பேசலாம். நகராட்சி ரோடு சரியில்லை என யூனியன் கூட்டத்தில் பேசக்கூடாது. பழுதடைந்த சாலை வழியாகதான் அமைச்சர் அடிக்கடி செல்கிறார். அவரிடம் தான் நீங்கள் கூற வேண்டும் என்றார். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் சுடர்வள்ளி சசிக்குமார், ஆழ்வார் ராமானுஜம், ஜெகத்சிங்பிரபு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. துணைத்தலைவர் விவேகன்ராஜ் தலையிட்டு பிரச்னையை முடிவிற்கு கொண்டு வந்தார். மாரிமுத்து, கவிதாபிரவீன், சண்முகத்தாய், முருகன், அன்பரசு ஆகியோர் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன