ஈரோடு, ஜன. 26: தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில், திண்டல் வேளாளர் கல்லூரியில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதனை ஈரோடு கலெக்டர் கதிரவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் பெருந்துறை ரோடு வழியாக செங்கோடம்பள்ளம், பழையபாளையம், குமலன்குட்டை வழியாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் தின உறுதி மொழியினை கலெக்டர் கதிரவன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.