×

இரணியல் அருகே பரபரப்பு குழந்தைகளுடன் பைக்கில் வந்த ஆசிரியையிடம் செயின் பறிப்பு தவறி விழுந்து காயம்

திங்கள்சந்தை, ஜன. 26: இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் பைக்கில் வந்த ஆசிரியையிடம் பைக்கில் வந்த மர்மநபர்கள் செயின் பறித்தனர். இதில் ஆசிரியை மற்றும் 2 குழந்தைகள் கீழே விழுந்து காயமடைந்தனர். தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின்மேரி(33). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கண்டன்விளையில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவுக்காக 2 குழந்தைகளுடன் பைக்கில் சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். இரணியல் - தக்கலை சாலையில் ஆழ்வார்கோயில் பகுதியில் வந்தபோது, பின்னால் ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து 2 வாலிபர்கள் வந்தனர். திடீரென அந்த வாலிபர்கள் ஜோஸ்பின் மேரியின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் செயினை பறிக்க முயன்றனர். அதிர்ச்சையடைந்த ஜோஸ்பின் மேரி சுதாரித்துக்கொண்டு செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இந்நிலையில் பைக்கில் இருந்து 2 குழந்தைகளுடன் ஜோஸ்பின் மேரி கீழே விழுந்தார்.

இந்த போராட்டத்தில் செயின் பாதியாக அறுந்தது. அதில் திருடர்கள் கையில் 2 பவுன் செயின் சிக்கியது. இதனிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்கு இருவரும் தப்பி விட்டனர். இதுகுறித்து ஜோஸ்பின் மேரி இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலையில் வளைவான இப்பகுதியில் மின்விளக்குகள் கிடையாது. இங்கு ஏற்கனவே இதுபோல் 2, 3 செயின்பறிப்பு சம்பங்கள் நடந்துள்ளன. அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. எனவே இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

Tags : teacher ,children ,Eraniyal ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...