நாமக்கல், ஜன.26: நாமக்கல் மாவட்டத்தில், 18 வயது நிரம்பிய 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்க்கவில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில், தேசிய வாக்காளர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது:வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்காளராக பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகள் கொண்டு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை கட்டாயம் சேர்க்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 18 வயது நிரம்பிய 60 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 30 ஆயிரம் பேர் மட்டும் தான், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 30 ஆயிரம் பேரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கவேண்டும் என்றார்.