×

கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் கொளகாத்தம்மன் கோயில் சுமார் 30 ஆண்டு காலமாக உள்ளது. இந்த கோயில் தற்போது திருப்பணிகள் செய்ய பொதுமக்கள் முடிவு செய்யப்பட்டு, கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த கோயில் கட்டுமான பணியை ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார் உட்பட ஐந்து பேர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் கேட்டபோது அவர்கள் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து நேற்று புதுமாவிலங்கை பகுதியை சேர்ந்த ஏரளான பொதுமக்கள் கடம்பத்தூர் - பேரம்பாக்கம் சாலை புதுமாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்றது. தகவலறிந்த பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கே.என்.தாஸ் மற்றும் கடம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோயிலை சேதப்படுத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அந்த வழியாக போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,blockade ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி