பெரணமல்லூர், ஜன.24: வருவாய்த்துறை ஒப்படைக்கும் மணலை விற்று காசாக்கியது தொடர்பாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் நேற்று டிஎஸ்பி அறிவழகன் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி கிராமம் வழியே செய்யாற்று படுக்கை செல்கிறது. இந்த ஆற்றுப்படுக்கை மணல் கடத்தும் கும்பலால் நாள்தோறும் சிதைக்கப்பட்டு வந்தது. இந்த கும்பல் சேத்துப்பட்டு போலீசாருக்கு உரிய கட்டிங்கை கொடுத்து மணலை கடத்தி வந்தது. இதையறிந்தும் பொதுமக்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். மேலும், அவ்வப்போது பொதுமக்கள் கூறும் தகவலின்பேரில் வருவாய்த்துறையினர் ரோந்து சென்று மணலுடன் மாட்டுவண்டி, டிராக்டர், லாரி போன்ற மணல் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து வந்தனர். ஆனால், வருவாய்துறையினர் பறிமுதல் செய்த மணலை போலீசார் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியானது.