திருவண்ணாமலை, ஜன.24: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் நேற்று கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், வாக்காளர்களின் கடமை போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நேற்று நடந்தது. திருவண்ணாமலை சண்முகா கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.