பண்ருட்டி, ஜன. 24: பண்ருட்டி அருகே 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டதால் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் - தளவானூர் இடையே தென்பெண்ணையாற்றில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ரூ.25.17 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த 3 மாதத்திற்கு முன் இந்த தடுப்பணை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பெய்த கனமழையால் தடுப்பணை நிரம்பியது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீராதாரம் உயர்ந்தது. முதன்முதலாக கட்டி முடித்த தடுப்பணையில் நீர் தேங்கியது கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள தடுப்பணையின் ஷட்டர் பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் இருந்து திடீரென 20மீ. தாண்டி தண்ணீர் குபீர் குபீர் என வெளியேறியது. நேரம் ஆக ஆக வெளியேறும் தண்ணீர் வேகம் அதிகரித்தது.