திசையன்விளை, ஜன.24: திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் 11வது தேசிய வாக்களர் தினத்தை முன்னிட்டு கோலப் போட்டி நடந்தது. ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கோலப் போட்டியில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரைச்சுத்துப்புதூர், அப்புவிளை, முதுமொத்தன்மொழி, இடையன்குடி, குமாரபுரம், மகாதேவன்குளம், உறுமன்குளம், ஆனைகுடி, கேட்டைக்கருங்குளம் ஆகிய ஊராட்சிகள் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களுக்கு திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இதையடுத்து ரகுமத்துலா தலைமையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேர்தல் துணை தாசில்தார் பழனி, முதுநிலை ஆர்ஐ கொம்பையா, ஆர்ஐக்கள் துரைச்சாமி, செல்வி, விஏஓக்கள் குமாரபுரம் செல்வக்குமார், கஸ்தூரிரெங்கபுரம் இசக்கியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.