ஓபிசி ஒதுக்கீட்டில் வருமான வரம்பை நீக்க வேண்டும்

பொள்ளாச்சி, ஜன. 24: ஓபிசி ஒதுக்கீட்டில் மட்டும் உள்ள வருமான வரம்பை உடனே நீக்க வேண்டும் என்ற பொள்ளாச்சியில் நடந்த பிற்படுத்தபட்ட சமூகத்தினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று, பிற்படுத்தபட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, செயலாளர் திருகுணான சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சிவக்குமார்,  தமிழ்செல்வன், சூலூர் சந்திரசேகர், ரத்தினசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின்போது, சதிவாரி  கணக்கெடுப்பில் உள்ள விவரங்களின் உண்மையை அரசு உறுதி செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுத்தபின், தாலுகா, வார்டு, நகரம், மாநகராட்சி வாரியாக பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வலை தளத்தில் வெளியிட வேண்டும். கணக்கெடுப்பு இறுதி செய்யப்பட்டு வெளியிட்டபின், அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகைக்கேற்ப விகிதசாரா ஒதுக்கீடு அல்லது சாதி தொகுப்புப்படி வழங்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின், பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான கோரிக்கைகள் மீது இறுதி  முடிவெடுக்கும் வரை, தற்போதுள்ள  ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து குறித்த அறிவிப்பை வெளியிட கூடாது. மத்திய அரசு, ஓபிசி ஒதுக்கீட்டில் மட்டும் உள்ள வருமான வரம்பை உடனே நீக்க வேண்டும். மருத்துவ முதுநிலை மேற்படிப்பில், ஓபிசி ஒதுக்கீட்டில் உள்ள 27சதவீதத்தை உடனே வழங்க வேண்டும்.  பிற்படுத்தபட்டோர் ஆணையம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றிற்கு, சாதி வாரியாக சுழற்சி முறையில் அனைத்து பிற்படுத்தபட்டோருக்கு,  தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் , வருமான சான்றிதாழ்  வழங்குதலை முற்றிலும் கணிணி மயமாக்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: