×

ரூ.55லட்சம் நிதி ஒதுக்கியும் சமுதாய நலக்கூடம் அமைக்காததால் மக்கள் காத்திருப்பு போராட்டம்

பொள்ளாச்சி, ஜன 24:  பொள்ளாச்சி அருகே கா.க.புதூரில், ரூ.55லட்சம் நிதி ஒதுக்கியும் சமுதாய நலக்கூடம் அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பொள்ளாச்சியை அடுத்த ஆத்துப்பொள்ளாச்சி அருகே காளியப்பகவுண்டன்புதூர்(கா.க.புதூர்) கிராமத்தில், சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரூ.55லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட சுமார் 3ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்னும், கா.க.புதூரில்  சமுதாய நலக்கூடம் அமைக்கவில்லை. இது அப்பகுதி பொதுமக்களிடையே வேதனை ஏற்படுத்தியுள்ளது. போதிய நிதி ஒதுக்கியும். சமுதாய நலக்கூடம் அமைக்க தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து  தமிழ்நாடு திராவிடர் கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒருநாள் காத்திருப்பு போராட்டம் கா.க.புதூரில் நேற்று நடைபெற்றது.

இதற்கு, அமைப்பு செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ரிமுத்து முன்னிலை வகித்தார்.  இதில், திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல்செல்வராஜ் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் கா.க.புதூரில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று உறுதி அளித்தார். காலை  8மணிக்கு துவங்கிய இந்த காத்திருப்பு போராட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில், பெண்கள், இளைஞர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்