திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமத்துவபுரங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்படும் கனிமொழி எம்பி பேச்சு

பரமக்குடி, ஜன.24:  திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி பரமக்குடி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவ,ர் பாம்புரம் பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார். அப்பகுதி மக்கள் கூறுகையில், சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் என்று சொன்னாலே எங்களை ஏளனமாக அதிகாரிகள் பார்க்கின்றனர். சாலை வசதி, குடிநீர் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்று பார்த்தால், சமத்துவபுரம் பகுதியா என கேட்டு அலட்சியம் செய்கின்றனனர். என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அப்போது அவர் மத்தியில் கனிமொழி எம்பி பேசியதாவது, ‘‘10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் பாரபட்ச நடவடிக்கைகளால் பாம்பூர் சமத்துவபுரம் பாழடைந்து உள்ளது.  திமுக ஆட்சி வந்தவுடன் தலைவர் ஸ்டாலின் சரி செய்து தருவார். அதிமுக ஆட்சியில் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில், பாலியல் கொடுமை. சிறுமி முதல் பெரியவர்கள் வரை இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் ஆட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு இல்லை. வேலை பார்ப்பவர்களுக்கு சரியாக சம்பளமும் கொடுப்பதில்லை. பயிர் இன்சூரன்ஸ் வழங்கவில்லை. முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தவிக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டும். குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. வேலை பார்ப்பவர்கள் வாங்கும் சம்பளத்தை தண்ணீருக்கே செலவிட வேண்டிய அவல நிலை உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. தமிழகத்தை மீட்டெடுக்க வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை புறக்கணிப்போம், அதிமுகவை நிராகரிப்போம்’’ என்று பேசினார். தொடர்ந்து எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். மிளகாய் நவதானிய வியாபாரிகளையும், முதலாளிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி இறந்த ராஜேஷ்குமார் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

Related Stories: