மதுரை, ஜன. 24: தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் அலுவலகம் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்காதபோதும், மாணவர்களின் கற்றல் அடைவு பாதிக்காத வண்ணம், பள்ளி கல்வித்துறை பலமுயற்சிகள் மேற்கொண்டது.
லேப்டாப்களில் காணொலிகள் பதிவேற்றம், கல்வி தொலைக்காட்சி மற்றும் சில தனியார் தொலைக்காட்சிகளில் பாடம் சார்ந்த காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மேலும் குறியீடுகளுடன் கூடிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. தற்போது 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் இதுவரை எந்தளவுக்கு அடைவுத்திறன் பெற்றுள்ளனர் என அறிந்து, அதனடிப்படையில், மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு எந்தெந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்கள் திட்டமிடும் பொருட்டு, ஆரம்ப கற்றல்நிலை மதிப்பீடு மேற்கொள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீடு எமிஸ் மூலமாக பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப்பை பயன்படுத்தி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககம் மூலமாக நடத்தப்படவுள்ளது’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.