சேந்தமங்கலம், ஜன.24: பழைய பாளையம் ஏரியில், இரை தேடி ஏராளமான கொக்குகள் குவிந்துள்ளன. கொல்லிமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திக்குளம் சென்னகுணம், பொம்மை சமுத்திரம் ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி அக்கியம்பட்டி வழியாக பழைய பாளையம் ஏரிக்கு செல்கிறது. இதனால் ஏரியில் உள்ள சிறு குழிகளில், தண்ணீர் தேங்கி வருகிறது. தண்ணீரில் அடித்து வரப்பட்ட பூச்சிகள், சிறிய மீன், புழுக்களை உண்பதற்காக ஏராளமான கொக்குகள், நாரைகள் குவிந்துள்ளன. இவை அங்குள்ள செடி, கொடி மரங்களின் அமர்ந்திருப்பதை பார்த்தால், பறவைகள் சரணாலயம் போல காட்சியளிக்கிறது. இதனை காண அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.