×

கால்வாய் அமைக்க வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 150வது முறையாக விவசாயிகள் மனு'

கிருஷ்ணகிரி, ஜன.24:  கால்வாய் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகள், இழப்பீடு கேட்டு 150வது முறையாக மனு அளித்தனர். கிருஷ்ணகிரி அணையின் இடதுபுறக்கால்வாய் வழியாக, உபரிநீர் பாளேகுளி ஏரிக்கு செல்கிறது. இந்த ஏரியில் இருந்து சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப கால்வாய் அமைக்கும் திட்டம், கடந்த 2012ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்க 700 குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்தில் இருந்து மரங்கள் அகற்றப்பட்டதற்கு உரிய இழப்பீடு கேட்டு, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாளேகுளி-சந்தூர் ஏரி இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு கூறுகையில், ‘கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, குடியரசு தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், தலைமை பொறியாளர், கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் உட்பட பல அலுவலர்களுக்கு தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகிறோம். நாங்கள் அளிக்கும் மனுக்களுக்கு, நில நிர்வாக ஆணையருக்கு முன்மொழிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற பதில் மட்டும் வருகிறது. இனியும் கால தாமதம் இல்லாமல், எங்களுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மின்னஞ்சல் மூலம், முதல்வருக்கு 150வது முறையாக மனு அனுப்பியுள்ளோம்,’ என்றார்.

Tags : land ,canal ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்