கிருஷ்ணகிரி, ஜன.24: கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, நேற்று நகர காவல் நிலையம் மற்றும் வட்டார போக்குவரத்துறை சார்பில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் துவங்கிய பேரணிக்கு, டிஎஸ்பி சரவணன் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புசெழியன் முன்னிலை வகித்தனர். பேரணியை ஏடிஎஸ்பி ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், பெண் போலீசார், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், போலீசார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்தவாறு பங்கேற்றனர். லண்டன்பேட்டை, பெங்களூரு சாலை, 5 ரோடு ரவுண்டானா, சென்னை சாலை வழியாக, தனியார் திருமண மண்டபத்தை சென்றடைந்தது.