தண்டையார்பேட்டை: வரும் தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை தோற்கடிப்போம், என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து, சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை ராயபுரம் பழைய ஆடுதொட்டி சாலையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசியதாவது: ராயபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருக்கும் ஜெயக்குமார், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் எதையும் இதுவரை பூர்த்தி செய்யவில்லை. அதிமுகவில், முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் அனைவரும் ஊழல் செய்து, பலகோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக கவர்னரிடம் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளோம்.