செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில், தேசிய பேரிடர் மேலாண்மை மைய குழு துணை ஆலோசகர் நவல்பிரகாஷ், சார்பு செயலர் பங்கஜ்குமார், மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி ஆகியோர் நிவர்புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்த சீரமைப்பு பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை மேலாண்மை மைய குழு உயர் அலுவலர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து நூக்கம்பாளையம், மண்ணிவாக்கம், முடிச்சூர், நந்திவரம் நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் எடுக்கப்பட்ட சீரமைப்பு பணிகளான கரைகளை பலப்படுத்துதல், தூர் வாரி சீரமைத்தல், மழை காலங்களில், குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீர் வெளியேற்ற தேவையான வழிவகைகளை செய்தல் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.